மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று திரும்பினார். நவம்பர் 20, 21ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகி நவம்பர் 22ஆம் தேதி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 3, 4 நாட்களாக கமலுக்கு இருமல், காய்ச்சல் இல்லை, இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதால் உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி இன்று (டிசம்பர் 1) கமலின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராமச்சந்திரா மருத்துவமனை, “கமல்ஹாசன் முழுமையாகக் குணமடைந்துவிட்டார். எனினும் டிசம்பர் 3ஆம் தேதி வரை தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். டிசம்பர் 4ஆம் தேதியிலிருந்து அவர் தனது வழக்கமான பணிகளைத் தொடரலாம்” என்று தெரிவித்துள்ளது.
**-பிரியா**
�,”