அரசு கடன் வாங்கி பொங்கல் பரிசை விநியோகிப்பதாக திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் 19ஆம் தேதி சேலத்தில் தொடங்கிய முதல் நாள் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் அரசு கருவூலம் காலியாக இருப்பதாகவும், அதிமுக அரசு கடன் வாங்கி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசை விநியோகிப்பதாகவும் திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
பொங்கல் பரிசு விநியோகிப்பதை திமுக எதிர்க்கவில்லை என்ற அவர், கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ரூ.5,000 நிதி உதவி வழங்கச் சொன்னதே திமுக தலைவர் ஸ்டாலின் தான் என சுட்டிக்காட்டினார். ஆனால், அதனை நிராகரித்துவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான், இப்போது தேர்தல் காரணமாக கடன் வாங்கி பொங்கல் பரிசு விநியோகிப்பதாகவும் விமர்சித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்தும் போர்வையில் மத்திய, மாநில அரசுகள் பொது பணத்தை வீணடித்ததாக குற்றம் சாட்டினார். அரசாங்கங்கள், குடியிருப்பாளர்களிடமும், வரி செலுத்தும் குடிமக்களிடமும் கலந்தாலோசிக்காமல், மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றன, இது மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
*எழில்*�,