{கொரோனா இறப்பு சான்றிதழ்: ஈபிஎஸ் வலியுறுத்தல்!

Published On:

| By Balaji

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாகத் தமிழகத்தில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாகப் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் உயிரிழப்பு என்பது அதிகமாகவே இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 27,356 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு, அவர்கள் கொரோனா பாதிப்பால் தான் உயிரிழந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணை நோய் அல்லது வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தால், இறப்பு சான்றிதழ்களில் கொரோனா உயிரிழப்பு எனக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இன்று (ஜூன் 8) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்றால் இறப்பவர்களின் உடல்கள், கொரோனா தடுப்பு வழி முறைகளை முழுமையாகப் பின்பற்றி அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதால் ஒரு சிலர், இறந்தவர்களது உடல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று உற்றார் உறவினர் கலந்து கொள்ளும் வகையில் இறுதிச் சடங்கை மேற்கொள்கின்றனர்.

இதனால் கொரோனா நோய் தொற்று முழு அளவில் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் இறப்பு சான்றிதழ்களில் வேறு காரணங்கள் என்று குறிப்பிடப்படுவதால், கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.

எனவே , அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது இறப்பு சான்றிதழில் சரியான காரணத்தைக் குறிப்பிட்டு சான்று அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share