மக்களை நம்பிதான் அதிமுக உள்ளது என்று திருவண்ணாமலை பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி தொகுதிகளில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி மோகனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது, பேசிய முதல்வர் பழனிசாமி, “மக்கள் பாதிப்படைந்த நேரத்தில் நிவாரணம் வழங்கி மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்ட அரசு அதிமுக அரசு. தைப் பொங்கலை மக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கினோம். ஒரு வருடத்தில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,500 வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு. ஒருநாளாவது குடும்ப அட்டைகளுக்கு திமுக 100 ரூபாய் கொடுத்திருக்குமா? மக்களுக்குக் கொடுக்கிற கட்சி அதிமுக, மக்களிடமிருந்து எடுத்து கொள்கிற கட்சி திமுக” என்று விமர்சித்தார்.
”அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்து தரப்படவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் செய்யாறு பகுதியில் உள்ள தொழிற்சாலையைக் கொண்டு வந்தது அதிமுகதான். அதைத்தொடர்ந்து 100 கோடி ரூபாய் மதிப்பில் சிப்காட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. 2019 நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3 லட்சத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 304 தொழில் நிறுவனங்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழகம் என்று முதலீட்டாளர்கள் சொல்கிறார்கள்” என்றார்.
மேலும் அதிமுக செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும், தேர்தல் வாக்குறுதி குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்த முதல்வர் பழனிசாமி மக்களை நம்பிதான் அதிமுக உள்ளது. மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
**-பிரியா**
�,