அதிமுகவிடம் 40 தொகுதிகள் கேட்பதாக வெளியான தகவல் குறித்து எல்.முருகன் பதிலளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்கொண்டது பாஜக. நவம்பர் மாதம் தமிழகம் வந்த அமித் ஷா முன்னிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்துவிட்டது. ஆனால், இதற்கு அமித் ஷா எந்த பதிலையும் சொல்லவில்லை. அத்துடன், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை கூட்டணியின் வேட்பாளராக பாஜக இன்னும் ஏற்கவில்லை.
அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவின் சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், நடிகர் ரஜினிகாந்த் தேசியம், ஆன்மிகம் மீது அதிகமான பற்று கொண்டவர். பாஜக தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்ட கட்சி. ஆகவே, பாஜகவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளித்தால் அதனை வரவேற்போம் என்றார்.
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து இப்போது பேச முடியாது. தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம் என்றவர், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது பற்றி தேசிய தலைமைதான் முடிவு செய்யும் எனவும் அறிவித்தார்.
அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல் வெளிவந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த முருகன், “அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 40க்கும் அதிகமான தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படுவது வேறு யூகம்தான். ஊகங்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. தேர்தல் நேரத்தில்தான் தொகுதி குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
**எழில்**�,