அமித்ஷாவே வந்தாலும் திமுகதான் வெற்றிபெறும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில், மக்கள் கிராம சபை கூட்டம் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய கே.என்.நேரு, அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக ஊழல் புகார்களை நாங்கள் தெரிவிக்கிறோம். ஆனால், அவர்கள் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். ரேஷன் அரிசி 5.5 லட்சம் மெட்ரிக் டன்னை வெளிச்சந்தையில் அமைச்சர் காமராஜ் விற்றுள்ளார் என்று குற்றம்சாட்டினோம். ஆனால், குற்றச்சாட்டை மறுக்காமல் அறிக்கை நாயகன் ஸ்டாலின் என்று சொல்கிறார் காமராஜ் என்று குறிப்பிட்டார்.
பொங்கல் பொங்கல் பரிசு தொகுப்பில் 2500 ரூபாய் ரொக்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேரவில்லை என்றும், முதியோர் உதவித் தொகை வந்தது போல மெசெஜ் அனுப்பிவிட்டு அந்தத் தொகையை ஆளுங்கட்சியினரே எடுத்துக்கொள்வதாக குற்றம்சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, “கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்தும் , அவர்கள் எந்த சின்னங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் திமுக தலைவர் முடிவு செய்து அறிவிப்பார்” என்றார்.
முதல்வரை பணப் பயிர் செய்யும் விவசாயி என குற்றம்சாட்டிய அவர், மேற்கு வங்கத்தையும் தமிழகத்தையும் பாஜக குறி வைத்துள்ளது. எப்படி இருந்தாலும் திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும். எத்தனை அணிகள் அமைத்தாலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவே வந்து பணியாற்றினாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். அவர்களின் திட்டம் எடுபடாது. மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
**எழில்**�,