பாஜக, பாமக: அதிமுகவுக்கு நள்ளிரவில் தந்த திடீர் நெருக்கடி!

politics

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனைகள் நடந்திருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் வேட்பாளர் பட்டியலை நல்ல நாள் பார்த்து வெளியிட்ட அதிமுக தனது அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 10) வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு முடிந்த பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் என்னென்ன என்ற ஆலோசனை நேற்று தீவிரமானது அவரவருக்குரிய தொகுதிகளை இறுதி செய்வதற்காக நேற்று இரவு அதிமுக தலைமை அலுவலகத்தில்… பாமக தலைவர் ஜி.கே.மணி, பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனையில் அதிமுக எதிர்பாராத புதிய நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள் பாமகவும், பாஜகவும்.

தேமுதிக அணியில் இருந்தால் எத்தனை தொகுதிகள் என்ற பிரச்சினையை தீர்த்து வைத்தால் கூட, என்னென்ன தொகுதிகள் என்ற பிரச்சினை தேமுதிகவுக்கும் பாமகவுக்கும் தீவிரமாகியிருக்கும். இதற்கிடையில் நேற்று தேமுதிக கூட்டணியை விட்டுவிலகியதால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாமக தரப்பில் புதிய கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். “நாங்கள் ஏற்கனவே 28 தொகுதிகள் கேட்டிருந்தோம். தேமுதிகவைக் காரணம் காட்டித்தான் அதிக தொகுதிகள் தர முடியாது என்று கூறினீர்கள். இப்போது தேமுதிகதான் போய்விட்டதே. நாங்கள் கேட்ட எண்ணிக்கையில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கித் தாருங்கள்” என்று ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு திடீர் நிபந்தனை விதித்திருக்கிறார் பாமக தலைவர் ஜி.கே.மணி.

இதேபோல பாஜக தலைவர் எல்.முருகனும், “தேமுதிக இல்லாத நிலையில் எங்களுக்குக் கூடுதலாக பத்து தொகுதிகள் வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த திடீர் கோரிக்கையை எதிர்பாராத அதிமுக தலைமை, “கடைசி நேரத்தில் இப்படிக் கேட்டால் சிக்கல் ஆகுமே? நாம் எந்தெந்த தொகுதிகளில் என்று பட்டியல் ரெடி செய்தால்தான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்” என்று பதிலளிக்க, டாக்டரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என கூறியிருக்கிறார் ஜி.கே.மணி. அதேபோல முருகனும் கட்சியினருடன் ஆலோசிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

பாஜக, பாமகவுக்கு என்னென்ன தொகுதிகள் என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில், கிடைத்த இடைவெளியில் கிடா வெட்டப் பார்க்கின்றன இரு கட்சிகளும். இந்த திடீர் நெருக்கடியை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்தும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *