விருப்பத்தின்படி சொந்த மாவட்டங்களுக்குச் செல்லும் 1,353 போலீஸார்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் 1,353 போலீஸாருக்கு அவர்கள் விருப்பத்தின்படி சொந்த மாவட்டங்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் காவல் துறையில் மாவட்ட, மண்டல அளவில் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை டிஜிபி சைலேந்திரபாபு பரிசீலனை செய்து தீர்வு கண்டு வருகிறார்.

இந்த நிலையில் போலீஸ் டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் 1,353 போலீஸாருக்கு அவர்கள் விருப்பத்தின்படி சொந்த மாவட்டங்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் சென்னைக்கு 260 போலீஸாரும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 149 போலீஸாரும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 99 போலீஸாரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 96 போலீஸாரும், நெல்லை மாவட்டத்துக்கு 86 போலீஸாரும், நாமக்கல் மாவட்டத்துக்கு 72 போலீஸாரும், சிவகங்கை மாவட்டத்துக்கு 68 போலீஸாரும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 60 போலீஸாரும் இடமாறுதல் பெற்றுள்ளனர்.

சென்னை வடக்கு மண்டலத்தில் கடந்த 3ஆம் தேதி அன்று 300 போலீஸாரிடம் இருந்தும், 8ஆம் தேதி அன்று சென்னை மாநகர போலீஸார் 760 பேரிடம் இருந்தும் கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக வருகிற 15ஆம் தேதி (புதன்கிழமை) அன்று காலை திருச்சியிலும், மாலையில் மதுரையிலும், 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கோவையிலும் போலீஸார் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.இதில் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு போலீஸாரிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொள்கிறார்’ என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share