நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலம் அமல்படுத்தியது முதல், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசுவது அல்லது வாகன ஓட்டிகளை போலீசார் தாக்குவது என போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான மோதல் போக்கு தினம்தோறும் ஏதேனும் ஒரு இடத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அந்தவகையில், சங்கரன்கோவில் அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கல்லத்திகுளம் பகுதியில், ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, ஏட்டு பாலகிருஷ்ணன் என்பவர் விசாரணைக்காக அப்பகுதிக்குச் சென்றார்.
அப்போது குடிபோதையில் வந்த அந்த நபர் ஏட்டு பாலகிருஷ்ணனிடமும் தகராறில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தைகளால் போலீசாரை பேசினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.
அதில், அந்த நபர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, ஏட்டு பாலகிருஷ்ணன் மீது சாக்கடையை அள்ளி வீசியதுடன், மிரட்டல் தொனியில் பேசுகிறார். ஒரு கட்டத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை எடுத்துத் தூக்கி வீசுவது பதிவாகியிருந்து.
இதுகுறித்து ஏட்டு, சின்னக்கோவிலான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த அசோகன்(27) என்பதும், சென்னையில் ஒரு கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தவர் என்பதும் கொரோனா ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்கு வந்திருப்பதும் தெரியவந்தது.
தற்போது தலைமறைவாகியுள்ள அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
**-பிரியா**
�,