அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை வழக்கில் மீண்டும் விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களால்
அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட நிலையில்… அப்போது அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த தினகரன் இரட்டை இலை சின்னத்தை தன் தரப்புக்கு மீட்பதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்ற தரகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தை தினகரன் மீது தொடுத்தது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான டிடிவி தினகரனிடம் பகல் 12. 30 முதல் இரவு 11 மணி வரை விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை முடிந்து வெளியே வந்த தினகரன், “நான் நிரபராதி. இந்த விவகாரத்தில் யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள். அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வருவேன்” என்று கூறியிருந்தார்.
இந்த அமலாக்கத் துறை விசாரணை முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், மீண்டும் தினகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை விசாரணை பற்றி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில், [பாஜக தலைமையில் கூட்டணி: தினகரனை இறுக்கும் டெல்லி](https://minnambalam.com/politics/2022/04/14/20/ttv-dinakaran-ed-enquiry-bjp-head-alliance-admk-ammk-dmdk) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
“ஏற்கனவே இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு 11 மணி நேரம் வரை விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அடுத்த சில நாட்களுக்குள் மீண்டும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக இருப்பவர்களை அமலாக்கத்துறை மூலம் சரி கட்டி வருகிறது பாஜக அரசு என்ற புகார்கள் அதிக அளவில் இருக்கின்றன. அந்த வரிசையில் தான் தினகரனை அமலாக்கத்துறை மீண்டும் அழைத்து இருப்பதை பார்க்க வேண்டும். சட்டரீதியாக அந்த வழக்கில் பெரிய அளவு வொர்த் இல்லாத நிலையில், அமலாக்கத் துறை விசாரணை மூலம் டெல்லியின் அரசியல் காய்கள் நகர்த்தப்படுகின்றன என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
.**வேந்தன்**
.