�
தமிழகத்துக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக வழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில்,” தமிழகத்தில் தினசரி 2 லட்சம் தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மையத்தை தொடர்ந்து நடத்த தினசரி 2 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுவதால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை முன்கூட்டியே வழங்க வேண்டும்.
தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸூக்காக காத்திருப்பதை தவிர்க்க உடனடியாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும். மேலும், வருகிற மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
ரெம்சிடிவிர் மருந்து தயாரிக்கும் மாநிலங்கள், பிற மாநிலங்களுக்கும் அந்த மருந்தை அனுப்பி உதவ அனுமதிக்க வேண்டும். செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் தடுப்பூசி வேண்டி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகத்துக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
**வினிதா**
.�,