காவிரி டெல்டாவில் கால்வாய் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வார தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் வந்துசேர இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில், தற்போது தூர்வாரும் பணி நடப்பது விமர்சனங்களை உண்டாக்கியது.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 25) வெளியிட்ட அறிக்கையில், “தும்பை விட்டு வாலைப்பிடிப்பது போல, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அதிமுக அரசு. பாசனத்திற்கான நீர் இருப்பு அணையில் இருக்கிறது என்பது இந்த அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும், அது பற்றி பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவும் இல்லை; கவலைப்படவும் இல்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அணை திறக்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், அதற்குள் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி விடுவார்களா என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,
“மேட்டூரில் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கும் சென்றடையுமா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. துறை அமைச்சரின் அலட்சியம் அணையிலிருந்து வரும் காவிரி நீரும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா என்பது பதில் தெரியாத புதிராகவே இப்போது வரை இருக்கிறது.ஆகவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “வழக்கம் போல் அதிகாரிகளை நியமித்து, அவர்களிடமிருந்து ஆய்வு அறிக்கைகள் பெற்று, தூர்வாரும் பணிகள் அமோகமாக நடந்து விட்டது போன்ற கற்பனைத் தோற்றத்தை உருவாக்கி கணக்குக் காட்ட முயற்சிக்காமல், மேற்கண்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக்குழுவில் இடம்பெறச் செய்து, கால்வாய் தூர்வாரும் பணிகளில் எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் வெளிப்படையாகவும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறுவை சாகுபடிக்கு உண்மையிலேயே கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்பட்டிடும் வகையில் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
**எழில்**
�,