மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்தரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஆம்பூர் பிரியாணி திருவிழாவை மே 13, 14 ,15 ஆகிய தேதிகளில் நடத்துவதாக அறிவித்தது. மாவட்ட கலெக்டர் அமர் புஷ்வாஹா, பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம் பெறாது என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்சியரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பீப் பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விசிக, மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் மழையை காரணம் காட்டி, இவ்விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் கலெக்டர்.
மாட்டிறைச்சி பிரியாணிக்குத் தடை விவகாரம் பூதாகரமான நிலையில், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மாநில எஸ்சி/எஸ்டி ஆணையம் திருப்பத்தூர் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், “ஆம்பூர் பிரியாணி திருவிழாவில், பீஃப் பிரியாணிக்குத் தடை விதிக்கப்பட்டதாக ஆணையத்திற்குத் தகவல் வந்தது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான எஸ்சி/எஸ்டி மற்றும் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் பீப் பிரியாணி கூடாது என்று சொல்வது இம்மக்களுக்கு எதிரான பாகுபாடாக பார்க்கப்படுகிறது. இந்த பாகுபாட்டின் அடிப்படையில் தீண்டாமை நடைமுறையாக இந்த விஷயத்தை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதுபோன்று பாகுபாடு பார்க்கும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தச்சூழலில் விசிக தலைவர் திருமாவளவன், “மாநில எஸ்சி எஸ்டி ஆணையத்தின் நடவடிக்கை தமிழகத்தில் கூர்த் தீட்டப்படும் பெரும்பான்மை மதவாத மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை வீழ்த்துவதற்கு வழிகாட்டுவதாகவும்
அதிகார வர்க்கத்தைத் தவறாகப் பயன்படுத்தும் சங்கத்துவ சதியை முறியடிப்பதாகவும் அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “உணவுப்பழக்க வழக்கம் என்பது தனிப்பட்ட அவரவர் விருப்புரிமை சார்ந்தது; அதில் அரசோ, அரசியல் இயக்கங்களோ தலையிட்டு, இடையூறு செய்வது என்பது அரசியலமைப்புச்சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
மாட்டிறைச்சி என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மிக்க சுவையான நல்லதொரு உணவாகும். அது உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் உடல் வலுவுக்கான சத்துமிக்க இறைச்சி உணவெனப் பரிந்துரைக்கப்பட்டு, எல்லாத்தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்பட்டு வரும் நிலையில், இந்திய ஒன்றியத்தில் அதற்கு மதச்சாயம் பூசி, முத்திரை குத்தி, அதனை உண்ணக்கூடாதென்றும், சந்தைப்படுத்தக் கூடாதென்றும் தடைகோரும் இந்துத்துவ இயக்கங்களின் செயல்பாடுகளும், நிலைப்பாடுகளும் கடும் கண்டனத்திற்குரியது.
மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்திய ஒன்றியம் முன்னிலையில் இருக்குமளவுக்கு வெளிநாடுகளுக்கு அதனை அனுப்பி வைக்கிறது ஆளும் பாஜக அரசு. இதில் இசுலாமிய, கிருத்துவ நாடுகளும்கூட உள்ளடக்கம்! ஊரார்களுக்கு மாட்டிறைச்சியை ஊட்டிவிட்டு, அதன்மூலம் வருவாய் ஈட்டி அந்நியச்செலாவணி பெறும் பாஜக அரசு, உள்ளவர்களுக்குத் தடைவிதித்து கிடுக்கிப்பிடிப் போடுவது நகைமுரணில்லையா? இங்கு மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைகோரும் பெருமக்கள், ஒன்றிய அரசு செய்யும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு எதிராக வாய்திறப்பார்களா? அதற்கெதிராகப் போராடத்துணிவார்களா? மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் பெருநிறுவனங்களிடம் தேர்தல் நன்கொடை பெற்றுக்கொண்டே, மாட்டிறைச்சியை உண்ணக்கூடாதெனக்கூறி, பாஜகவினர் செய்யும் அட்டூழியங்கள் அற்பத்தனமான இழி அரசியலில்லையா?
மாட்டிறைச்சி என்பது வெகுமக்களின் உணவுப்பழக்க வழக்கங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போன தற்காலத்தில், இந்துத்துவ இயக்கங்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுப்பதும், வேறு வழியற்ற நிலையில், அந்நிகழ்வையே நிறுத்த விளைவதுமான திமுக அரசின் வஞ்சகப்போக்குகள் வெட்கக்கேடானது. ஆரிய மேலாதிக்கத்தின் வெளிப்பாடான பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்குக்கூட நாணமின்றி அனுமதியளிக்கும் திமுக அரசு, மாட்டிறைச்சி உணவுக்கு அனுமதி மறுப்பதும், இந்துத்துவ இயக்கங்களின் கோரிக்கைக்குச் செவிமடுத்தது போல, அந்நிகழ்வையே நிறுத்த உத்தரவிடுவதும்தான் சனாதன இருளைக் கிழிக்கும் விடியல் ஆட்சியா? பசு மடம் அமைத்து, மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்தரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? பேரவலம்!
ஆகவே, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மாறாக, மாட்டிறைச்சி உணவுக்கு முற்றாக அனுமதி மறுப்பதுதான் திமுக அரசின் கொள்கை முடிவென்றால், மாட்டிறைச்சி உணவோடு கூடிய உணவுத்திருவிழாவை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**