திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படும் என்றும் தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளப் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் பரபரப்பாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், இன்று (மார்ச் 3) கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், மார்ச் 11 அன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு ஆயத்தமாகிவிட்ட வாக்காளர்கள், திமுகவின் தலைமையிலான கூட்டணியிடம் மிகுந்த எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கிறார்கள். அதனைக் கருத்தில்கொண்டே, ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தீர்மானத்துடன் ஊராட்சிகள் தோறும் மக்களைச் சந்திக்கும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை திமுக வெற்றிகரமாக நடத்தியது. ஒரு கோடிக்கும் மேலான மக்கள் அதிமுகவை நிராகரிக்கும் தீர்மானத்தை நேரில் வந்து நிறைவேற்றித் தந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் வெளியான பின், திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களின் குறைகளைத் தீர்த்துவைப்பேன் என்ற உறுதியினை வழங்கி, அதற்கான பொறுப்பினையும் நான் ஏற்றுக்கொண்டு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் செயல்திட்டத்துடன் ஒவ்வொரு தொகுதி மக்களையும் சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதற்கான ஒப்புகைச் சீட்டையும் வழங்கி, அவர்களின் குறைகளையும் ஆட்சியின் அவலங்களையும் நேரில் கேட்டறிந்தேன்.
திமுகவின் முன்னோடிகளும் தமிழகம் முழுவதும் பயணித்து, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் மக்களை நேரடியாகச் சந்தித்து, உரையாற்றி, அவர்களின் எண்ணங்களைக் கண்டறிந்துள்ளனர். இவையனைத்தையும் முழுமையாகத் தொகுத்து, கவனமாக ஆலோசித்து, செயல்வடிவமாக்கிடும் பணிகள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டன.
பத்தாண்டு காலமாக தமிழகத்தை இருளில் தள்ளிய அதிமுக ஆட்சியிடமிருந்து தமிழகத்தை விடுவித்து, புதிய விடியலை உருவாக்கவும், எதிர்வரும் அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குப் புது வாழ்வு தரும் திட்டங்களை முன்வைக்கும் வகையிலும் இலட்சியப் பிரகடனம் ஒன்று, தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 7 அன்று மாநாடு போல நடக்கவுள்ள சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தேன்.
அந்தப் பிரகடனத்தின் இரண்டு முக்கிய அம்சங்களில் ஒன்று, தமிழக வளர்ச்சிக்கான ஏழு முக்கிய வழிகாட்டுதலை விளக்குதல். மற்றொன்று, தமிழகத்திற்கான தொலைநோக்குத் திட்ட ஆவணம் வெளியிடுதல். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்தோங்கிய தமிழ்நாட்டைக் கவனமுடன் கட்டமைப்பதற்கான திமுகவின் மாபெரும் திட்ட அறிக்கையாக இது அமையும். இது கனவு அறிக்கையாக இல்லாமல், தமிழகத்தை மீட்டெடுக்கும் செயலை நிறைவேற்றும் செயல்திட்டமாக்கப்படும் என்ற உறுதியினை வழங்கி, அதற்கான பொறுப்பையும் மகிழ்வுடன் சுமந்திட நான் தயாராக இருக்கிறேன்.
தமிழக மக்களை நேரில் சந்தித்து, திமுக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்களுடன் பலகட்டங்களாக நடத்திய செறிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில், பத்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் எட்ட வேண்டிய இலக்கு துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “திருச்சிச் சிறப்புக் கூட்டத்தில் வெளியிட்டதும், 20 நாட்களுக்குள் இந்தத் தொலைநோக்கு ஆவணத்தை திமுக தொண்டர்களும் முன்னணி நிர்வாகிகளும் வீடு, வீடாக கொண்டு போய்ச் சேர்த்து, தமிழகத்திலுள்ள இரண்டு கோடிக் குடும்பங்களிடமும் இந்தத் தொலைநோக்குப் பார்வை குறித்து விரிவான பரப்புரைகள் செய்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் தலையாய பணியும் காத்திருக்கிறது.
இந்தப் பணி மட்டுமல்ல, ‘சொன்னதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம்’ என்ற தலைவர் கருணாநிதியின் வழியில், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையும் இறுதி வடிவம் பெற்று வருகிறது.
இந்தப் பணியை மேற்கொள்வதற்காக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் தமிழகம் முழுவதும் பொதுமக்களை நேரிலும், அதிலும் குறிப்பாக, வணிகர்கள், இளைஞர்கள், பெண்கள், விளிம்புநிலைச் சமூக மக்கள் என அனைத்துத் தரப்பினரைத் தனித்தனியாகவும் சந்தித்து, அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் விரிவாகக் கேட்டறிந்தனர். அவற்றைத் தொகுத்து, அதிலிருந்து மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகைகளிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
மக்களாட்சி எனப்படும் ஜனநாயகத்தின் மாண்பினை அடிப்படையாகக் கொண்டு, திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை – 2006-ம் ஆண்டு கருணாநிதி கூறியதைப் போலவே தற்போதைய 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும்; தமிழக மக்களின் மனங்களைக் கவரும். திமுக சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையை மார்ச் 11-ம் தேதி வெளியிடவிருக்கிறேன்.
அதற்கு முன்பாக, களத்தில் நிற்கும் ஆர்வத்துடன் திமுகவினர் ஆயிரக்கணக்கில் விருப்ப மனு தந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் சந்திக்கும் வகையில் மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை அதற்கென அமைக்கப்பட்ட குழு சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் களத்தில் இவை இரண்டும் பெரும்பணி மட்டுமல்ல, திமுகவின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு நாம் நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்புமாகும். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிட, தேர்தல் களத்தில் இமைப்பொழுதும் சோர்ந்திடாமல் பணியாற்ற வேண்டிய கடமை உடன்பிறப்புகளாகிய உங்களுக்கும் இருக்கிறது. உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. சோர்வின்றி உழைத்திடுவதற்கான அருமருந்தாகத்தான் என் பிறந்தநாளில் உங்களிடமிருந்து அன்பு தவழக் கிடைத்த வாழ்த்துகளைக் கருதுகிறேன்.
மார்ச் 1 எனக்குப் பிறந்தநாள் என்றாலும், தமிழகத்தின் விடியலுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய திமுகவின் லட்சியப் பிரகடனத்தை வெளியிடும் மார்ச் 7 நமக்கான சிறந்த நாள். ஏப்ரல் 6-ல் மக்கள் எழுதப்போகும் வெற்றித் தீர்ப்பையும், மே 2 அன்று திமுக அதனை அதிகாரப்பூர்வமாகப் பெறப் போவதையும் கட்டியம் கூறும் நாள் என்று எழுதியுள்ளார் ஸ்டாலின்.
**-பிரியா**
�,”