புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 31ஆம் தேதியன்று 12 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை போக்குவரத்திற்கு தடை, பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, பைக் ரேஸ் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. விதிமீறல்களை தடுப்பதற்காக, சென்னை முழுவதும் 499 சோதனைச் சாவடிகள் அமைத்து 13 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் சிறியதாக பிரச்சினை நடந்தாலும், பெரியளவில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”ஆங்கிலப் புத்தாண்டு தினம் தமிழ்நாடு எங்கும் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின்போது சாலை விபத்துகள் மற்றும் இதர அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காகவும் தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. நேற்று முன்தினம் இரவும், இன்று காலையும் ஓரிரு சாலை விபத்துகள், சச்சரவுகள் தவிர தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு அமைதியுடன் நடந்து முடிந்தது. தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி இரவு நடந்த மூன்று விபத்து சம்பவங்களில், ஒருவர் உயிரிழந்ததாகவும் சென்னைப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,