அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்த விவகாரத்தில் அதிமுக அரசியல் செய்வதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். Politics in transport workers’ strike
இன்று காலை நடைபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர் தொடர்பான பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றதால் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் தொடரும் என்று சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜன் அறிவித்தார்.
இந்த நிலையில், பொங்கல் சிறப்பு பேருந்துகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஜனவரி 8) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் வேலை நிறுத்த போராட்டம் பற்றி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “நாங்கள் ஏற்கனவே அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதும் அவர்கள் பேசுவதற்கு தயார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதையும் மீறி ஏதேனும் அவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் அரசு பேருந்துப் போக்குவரத்தை சுமுகமாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
ஏற்கனவே அவர்களிடம் எதையெல்லாம் செய்ய முடியும், எதையெல்லாம் செய்வதில் சிரமம் இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் அவர்கள் செய்யாமல் விட்டதை, இப்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு செய்யவில்லை என்று அதிமுக தொழிற்சங்கத்தினர் சொல்வதும், எடப்பாடி பழனிசாமி சொல்வதும் வேடிக்கையான விந்தையாக இருக்கிறது.
அவர்களால் முடியாது என்று விட்டுவிட்டார்கள். அதை நாங்கள் செய்ய முடியாது என்று சொல்லவில்லை. நிதி நிலை சீரான பிறகு செய்யப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறோம்.
செய்யவே முடியாது என்று சொன்னவர்கள், செய்கிறோம் என்று சொல்கிற எங்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் என்று சொல்வது பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில்தான். இது அரசியல் உள் நோக்கம் கொண்டது.
தேர்தல் வரும் நேரத்தில் இப்படி செய்தால் மக்களுக்கு அரசு மீது கோபம் வரும் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் இதையெல்லாம் அறிவார்கள். தங்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் மீதுதான் பொது மக்களுக்கு கோபம் வரும்.
அதிமுக தொழிற்சங்கத்தினர் சிலர் இன்றே பேருந்துகளை பணிமனைக்கு திருப்புவதாக சொல்கிறார்கள்.
அவர்களே அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வருவோம் என்று சொல்வதும், அவர்களே அதற்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும் தவறான செயல்.
இது பொதுமக்களை பாதிக்கக்கூடியது. இதுகுறித்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் அமைச்சர் சிவசங்கர்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!
இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
Politics in transport workers’ strike
