தொண்டர்கள் கோரிக்கையின் அடிப்படையில் ‘நமது புரட்சி தொண்டன்’ என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில், ‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழ் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பின், பண்ருட்டி ராமச்சந்திரன் நாளிதழை வெளியிட அதனை ஓபிஎஸ் ஆதரவாளார்கள் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நமது இயக்கத்தில் துரோகிகளுக்கு இடமில்லை, மக்களும் தொண்டர்களும் நம்மோடு தான் உள்ளனர்.
நமக்கென்று ஒரு பத்திரிக்கை வேண்டும் என தொண்டர்களின் கோரிக்கையால் தான் ‘நமது புரட்சி தொண்டன்’ என்கிற நாளிதழை தொடங்கியுள்ளோம்.
இரண்டாம் தர்ம யுத்தத்தை ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாக அதன் பரிமாணத்தை அடைந்து மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றி வருகிறோம். நாளிதழ் பரிமாண வளர்ச்சி அடைய மருது அழகுராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
எந்த காலத்திலும் அரசியல் நாகரீகத்தில் இருந்து குறைந்துவிடாமல் எதிர் கட்சிகளும் பாராட்டும் விதமாக கருத்துகளை முன்வைத்த அண்ணா வழியில் நமது புரட்சி தொண்டன் நாளிதழ் செயல்படும்.
தொண்டர்களிடம் இருந்து ஆண்டு சந்தா பெற்றுள்ளோம். எனவே நீங்களும் நாளிதழில் பங்காளிகள் தான். அதன் படி என்றும் இந்த நாளிதழ் செயல்படும்.
எம்.ஜி.ஆர் வகுத்த சட்டம் தொண்டனுக்கு கொடுத்த உச்ச பட்ச மரியாதை. தொண்டனும் தலைமைக்கு போட்டியிடும் வாய்ப்பு, அதற்கு சிறு மாசு ஏற்படுவதற்கு யாராவது முயற்சித்தால் அதை முளையிலே கிள்ளி எறியும் சக்தியாக தான புரட்சி தொண்டன் நாளிதழ் இருக்கும்.
ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து அதனை உச்சநிலையில் நிறுத்துவது என்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்பது நன்கறிவேன்.
நீங்களும் உறுதுணையாக நின்று பணியாற்ற வேண்டும். தமிழக மக்களின் நலன் காக்கும் பத்திரிக்கையாக நமது புரட்சி தொண்டன் பத்திரிக்கை இயங்கும்” என தெரிவித்தார்.
நமது புரட்சித் தொண்டன்’ நாளேட்டின் ஆசிரியராக, நமது எம்ஜிஆர், நமது அம்மா ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு உரைகள் எழுதித் தந்தவரும், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இது தொடர்பான செய்தியை மின்னம்பலத்தில், ‘வருகிறது ஓபிஎஸ் சின் தொண்டன் டிவி-பேப்பர்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
”ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி இல்லை” – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!