தனது சித்தாந்த புகழை பாடவில்லை என்பதற்காக ஆளுநரை திமுக வேண்டுமென்றே அவமதித்து அனுப்பியிருப்பதாக வானதி சீனிவாசன் காட்டமாக பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கோபமாகப் பேசிய அவர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கேவலமான நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
தங்கள் அரசாங்கத்தின் திறமையின்மையை மறைக்கவும், லஞ்ச ஊழல் புகார்களிலிருந்து தப்பிக்கவும், அவர்களின் வாரிசு அரசியலைப் பற்றி மக்கள் அதிகம் பேசாமல் பார்த்துக் கொள்ளவும் கவர்னருக்கு எதிர்ப்பு என்ற கேவலமான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
ஆளுநர் உரையாற்றும்போது, ஆளுங்கட்சி தங்களுக்கு சம்மந்தம் இல்லாதது போன்று கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு அவருடைய உரையை ஆரம்பிக்கும்போது அதிகமான தொந்தரவுகளை கொடுத்து பிறகு வெளியேறினார்கள்.
அதுமட்டுமல்ல கவர்னர் உரை என்பது மாநில அரசு தயாரித்துக் கொடுப்பதை படிக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கவர்னரை தங்களது சித்தாந்தத்தை புகழ்பாடக்கூடிய ஒருவராக நினைக்க இந்த அரசால் முடியாது.
எவை இந்த அரசின் திட்டங்களோ அதைத்தான் கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார். அதுதான் பாரம்பரிய மரபு.
ஆனால் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு எதிராக அவர் வெளியிடங்களில் பேசுகிறார் என்று கடுமையாக குற்றம் சாட்டியவர்கள், சட்டப்பேரவையில் அதை களமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுங்கட்சியின் இந்தப்போக்கு மாநில நலனுக்கு உதந்ததல்ல. மாநில அரசு உறவு பேணாத தன்மையையே இது காட்டுகிறது.
நீட் விலக்கைப் பொறுத்த வரை தேவையான விளக்கங்களை கொடுத்திருப்பதாக இந்த அரசு சொல்கிறது. வெளிப்படையாக அறிவியுங்கள், என்ன விளக்கத்தை கவர்னர் கேட்டார். என்ன விளக்கத்தை அரசு கொடுத்தது என்று.
அரசு நினைப்பதை கவர்னர் செய்யவில்லை என்பதற்காக, சட்டமன்றத்தில் அசிங்கப்படுத்துவீர்களா? இதுதான் ஜனநாயகப் போக்கா?. தவறான உதாரணத்தை ஆளும் திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
கலை.ரா
ஆளுநர் மாளிகை முற்றுகை: விசிக அறிவிப்பு
“மரபை மீறிவிட்டார் முதல்வர்”: எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு!