பெரியாரை அவதூறாக பேசிய வழக்கில் சீமான் நாளை (பிப்ரவரி 14) நேரில் காவல் நிலையத்தில் ஆஜராக ஆலோசனை செய்துள்ளார். Will Seeman appear in person
பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில், திராவிடர் கழக கடலூர் மாவட்டச் செயலாளர் தண்டபாணி புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் 192, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு (குற்ற எண் 8/2025) செய்யப்பட்டது.
இதையடுத்து நெய்வேலி டவுன் ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் பிப்ரவரி 10ஆம் தேதி காலை 7.45 மணியளவில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு சென்று அவரது கையிலேயே சம்மனை கொடுத்தார்.
இது தொடர்பாக மின்னம்பலத்தில், சம்மன்… சீமானிடம் போலீஸ் வாக்குவாதம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
வடலூர் காவல் நிலைய சம்மனை தொடர்ந்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்தும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராவது தொடர்பாக சீமான் இன்று சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளார்.
அதன்படி சீமான் நாளை வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக இருக்கிறார் என்கிறார்கள் சென்னை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.
“அதேசமயம் கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சீமான் நாளை நேரில் ஆஜராக மாட்டார். வழக்கறிஞர்கள் நாங்கள் தான் நேரில் ஆஜராக திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.
ஆனால் மாவட்ட எஸ் பி ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சீமானிடம் விசாரணை நடத்த கேள்விகளுடன் தயாராக உள்ளனர்” என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.