எடப்பாடி ஆட்சியில் வலியுறுத்திய ஸ்டாலின் இப்போது நடைமுறைபடுத்தாதது ஏன்?: விஜயகாந்த்

Published On:

| By Jegadeesh

தமிழகத்தில் போதை பொருள் புழங்குவதை கட்டுப்படுத்தி, அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ( ஆகஸ்ட் 10 ) உத்தரவிட்டார்.

போதை பொருளை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரித்தார். இன்று தமிழகம் முழுவதும் முதல்வர் பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிலையில், திமுக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்