ஆளுநரை சந்தித்தது ஏன்?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 2) ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை மாற்றத்துக்கான பரிந்துரைக் கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று (மே 2) மாலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அவர் திடீரென ஏன் ஆளுநரைச் சந்திக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் மா.சுப்பிரமணியன்.
அப்போது அவர், “கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 5ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காகக் குடியரசுத் தலைவரை நேரில் சென்று அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
அதுபோன்று இந்தவிழாவில் கலந்துகொள்ள வருமாறு இன்று நேரில் சென்று ஆளுநருக்கு அழைப்பு விடுத்தோம். ஆளுநரும் வருவேன் என்று கூறியிருக்கிறார்” என்றார்.
அப்போது ஆளுநரை சந்தித்ததற்கு வேறு எந்த காரணமும் இல்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “அழைப்பு விடுக்க மட்டும்தான் ஆளுநரைச் சந்தித்தோம்” என்று பதிலளித்தார்.
பிரியா
பீட்டர் பால் என் கணவரே இல்லை : வனிதா
ராகுல் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு!