100 நாள் வேலை சம்பளம் எப்பதான் கொடுப்பீங்க? ஈபிஎஸ் கேள்வி!

Published On:

| By Kavi


100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பதாக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

2024-25-ஆம் நிதியாண்டில் 100 நாள் வேலை வழங்குவதில் தேக்க நிலையுள்ளதாக கடந்த சில தினங்களாகவே அதன் பயனாளிகள் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 22) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (MGNREGA) உள்ள 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தப்படும் என்றும், சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், 100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு இதுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் ஆவார்கள். இந்த சம்பளத்தை நம்பியே அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, இந்த ஸ்டாலின் மாடல் அரசு இன்றுவரை வழங்கவில்லை.

இந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, 100 நாள் வேலையையே நம்பி வாழும் ஏழை, எளிய கிராம மக்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததால், பணம் இல்லாத நிலையில் இந்த ஆண்டு தைப் பொங்கல் கொண்டாட முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திய திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், புத்தாண்டு பிறந்த ஜனவரி மாதத்தில், பல மாவட்டங்களில் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் இதுவரை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. எனவே, 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், மீண்டும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share