மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? : அன்பில் மகேஷ் பதில்!

Published On:

| By christopher

மழை முடிந்து ஆய்வு செய்த பிறகே விடுமுறை அறிவித்த மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) கடக்க உள்ள நிலையில், பெய்து வரும் கனமழையை அடுத்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

ஆய்வுக்கு பிறகே பள்ளி திறப்பு!

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “நாகை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. அங்கு மழை பெய்து 15 நிமிடம் இடைவெளி விட்டாலே தண்ணீர் வடிந்து விடுகிறது. தற்போது வரை எந்த பாதிப்பும் அங்கு கிடையாது.

நாகை மாவட்டத்தில் 5400 ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தது. தண்ணீர் முழுமையாக வடிந்த பிறகு பயிர்கள் சேதம் இருந்தால் அந்த பாதிப்பு குறித்து கணக்கிடப்படும். அதன்பின் தேவையான நிவாரணம் விவசாயிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகும் பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக இருந்தால் மட்டும்தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மழை நின்ற பிறகு தேங்கியுள்ள மழைநீர், சீரான மின்சாரம் உள்ளிட்டவை ஆய்வு செய்தபின் பள்ளிகள் திறக்க அறிவுறுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

பகுதி நேரம் டூ முழு நேர ஆசிரியர்கள்!

தொடர்ந்து அவர், ”பகுதிநேர ஆசிரியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தேர்தல் வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் தேவை இன்னும் அதிகம் இருக்கிறது. டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவோம்” என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

புயலுடன் வெளுத்து வாங்கும் கனமழை : எடப்பாடி வேண்டுகோள்!

புயல் கரையைக் கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்: செந்தில்பாலாஜி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel