லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இன்று (நவம்பர் 18) தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள், ஹோமியோபதி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 14, 15ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோன்று மார்ட்டின் மருமகனும், விசிக துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையானது தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 22 இடங்களில் உள்ள அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த நிலையில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத 12 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “சந்தியாகு மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டலுக்கு எதிரான விசாரணை தொடர்பாக சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் விதிகளின் கீழ் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 22 வளாகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் என ரூ. 12.41 கோடி மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அதனுடன் அவரது வங்கி கணக்கில் உள்ள வைப்புத் தொகை ரூ. 6.42 கோடியும் முடக்கப்பட்டுள்ளது” என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பேராசிரியர்கள் மறுநியமனத்தை நீட்டித்து உத்தரவு!
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி! – வன அலுவலர் கூறியது என்ன?