எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் மசோதா குறித்த ஜேபிசி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 13) தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பல பக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Waqf bill JPC report pages missing
கடந்தாண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து மசோதா பாஜக எம்.பி ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கூட்டணி கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால் இன்று தாக்கல் செய்தார். அப்போது ஜேபிசியில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குறிப்புகள் இடம்பெற்ற பல பக்கங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும்! Waqf bill JPC report pages missing
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் பேசுகையில், “மசோதா மீதான அறிக்கையில் இருந்து பாஜக கூட்டணியில் அல்லாதவர்களின் எதிர்ப்புக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் ஜனநாயக விரோதமானது. இந்த அறிக்கையை அவைத் தலைவர் நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும்.
இந்த எம்.பி.க்கள் யார் தங்கள் சொந்த சமூகத்திற்காகவோ, சொந்த நலனுக்காகவோ போராட்டம் நடத்தவில்லை, அநீதி இழைக்கப்படும் சமூகத்திற்காக போராட்டம் நடத்துகிறார்கள்” என்று கார்கே கூறினார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் வக்ஃபு வாரிய திருத்த மசோதா மீதான கூட்டுக்குழு அறிக்கையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு கருத்துகள் அழிக்கப்பட்டது தொடர்பாக இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் புகார் கடிதம் கொடுக்கப்பட்டது.
ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டது பாஜக Waqf bill JPC report pages missing
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் விசிக எம்.பி ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “வெட்கக் கேடு! வக்ஃப் மசோதா தொடர்பாக அமைக்கப்பட்ட பாராளுமன்றக் கூட்டுக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் திமுக சார்பில் அக்குழுவில் உறுப்பினர்களாக இருந்த ஆ.ராசா, அப்துல்லா இருவரும் அளித்த மறுப்புக் குறிப்புகளில் ( dissent notes) பல இடங்களை குழுவின் தலைவர் அழித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் கௌரவ் கோகோய் அளித்த குறிப்புகளில் 2 பக்கங்களை அழித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அளித்த குறிப்புகளில் இறுதியில் தரப்பட்டிருக்கும் 15 அம்சங்களில் 10 ஐ அழித்துள்ளனர்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது பாஜக அரசு” என குறிப்பிட்டுள்ளார்.