பெண்கள் அரசியலுக்கு வந்து சாதிப்பது என்பது இப்போது சர்வ சாதாரணமாக ஆகியிருந்தாலும்… பொதுவாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னும் அசாதாரணமானவையாகவே உள்ளன.
குறிப்பாக சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்றிருக்கும் பிரியா கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்னதாக சென்னையின் மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டி வேகவேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் பிரியா.
அவர் சென்னை மேயராக பொறுப்பேற்றது முதலே மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் அவர் பவ்யமாக நடந்துகொண்டதுகூட சர்ச்சைக்குள்ளானது.
அமைச்சர்கள் மேயரை அதட்டுகிறார்கள் என்று சர்ச்சை வெடித்தது. அதற்கு பிரியா, ’அப்படியெல்லாம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிர்வாக ரீதியான நடைமுறை சவால்களை பிரியா எதிர்கொண்டு வரும் அதேநேரம்… சமூக தளங்களில் மேயர் பிரியாவை ஆபாசமாக சித்திரித்து சில சமூக விரோதிகள் வீடியோ வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வடசென்னை தமிழ்ச் சங்க தலைவரும், சென்னை மாநகர மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவருமான எ.த. இளங்கோ ஓர் அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அவர், “பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக மாண்புமிகு பிரியா ராஜன் அவர்கள் உள்ளார்.
இளம் வயதினரான அவர் தினமும் மாநகராட்சியின் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமல்லாது கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
மேயர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்புடைய காணொலிகளில் அவர் நடந்தும் செல்லும் காட்சிகளையும், அவர் அமர்ந்திருக்கும் காட்சிகளையும், அவரது முக பாவங்களையும்,
வெட்டி அதன் பின்னணியில் ஆபாச அர்த்தம் கொண்ட பாடல்களை ஒலிக்கவிட்டு அதை தனி காணொலிகளாக்கி ஃபேஸ்புக் ரீல்ஸ் பக்கத்தில் ஒரு சிலர் பதிவிட்டுள்ளனர். அதுபோன்ற அருவருப்பான காணொலிகளை எதேச்சையாக நான் பார்த்தேன்.
மக்களால் மாநகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மன்ற உறுப்பினர்களின் பேராதரவுடன் புகழ்பெற்ற சென்னை மாநகராட்சியின் மாண்புமிகு மேயராக இளம் வயதில் பொறுப்பேற்று,
திறம்பட மக்கள் பணியாற்றி வருபவரை, ‘இணையப் பொறுக்கிகள்’ பொதுவெளியில், சமூக ஊடகங்களில் இவ்வாறு இழிவு செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்?
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அரசு தலைமை செயலாளர், அரசு உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், பெருநகர சென்னை காவல் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர்,
அந்த அருவருப்பான காணொலிகளை வெளியிட்டுள்ள ‘இணையப் பொறுக்கிகள்’ மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டிருக்கிறார் வட சென்னை தமிழ் சங்க தலைவர் இளங்கோ.
நாம் இதுகுறித்து தேடியதில் Venkatesan Venkatesan என்ற ஃபேஸ்புக் பக்கத்தில்தான் சென்னை மாநகர மேயரைப் பற்றிய ஆபாசமான சித்திரிப்புகளுடன் கூடிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதை உடனடியாக கவனத்தில் கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–வேந்தன்
இன்று சசிகலா ஆலோசனைக் கூட்டம்: அஜெண்டா இதுதான்!
சாதாரண இந்து -சனாதன இந்து: வட இந்தியாவை வியக்கவைக்கும் ஆ.ராசா பேச்சு!