ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… விஜய் எடுத்த முக்கிய முடிவு!

Published On:

| By Selvam

காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன,

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (ஜனவரி 17) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தவெகவின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் தலைவர் விஜய் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

பொங்கல் பரிசு இன்னும் வாங்கலையா? – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஆட்கள் தேவை… ஆனா அந்த தகுதி தேவையில்லை – எலான் மஸ்க்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share