தமிழக முதல்வரின் உத்தரவை ஏற்று, தம் தொகுதியில் உள்ள 10 முக்கியமான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அம்மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு,
அதை, அந்தந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் (ஆகஸ்ட் 23ம் தேதியிலிருந்து) அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த உத்தரவை ஏற்று ஆகஸ்ட் 26ம் தேதி முதல் நபராக, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தம் தொகுதியில் உள்ள முக்கியமான தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளை பட்டியலிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கோவை தெற்குத் தொகுதி பிஜேபி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் தம் தொகுதிப்பட்ட 10 முக்கியமான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு இன்று (ஆகஸ்ட் 31) கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரனிடம் வழங்கியுள்ளார்.
அதில், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்குட்பட்ட பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
உலகத்தரம் வாய்ந்த பல்லுயிர் தாவரவியல் பூங்கா, நகரின் மையப்பகுதியில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட வேண்டும்.
நேரு ஸ்டேடியம் உலகத்தரம் வாய்ந்த அரங்கமாக உருவாக்கப்பட வேண்டும்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் கோயம்புத்தூர் விளையாட்டு அகாடமி நிறுவப்பட வேண்டும்.
சேத்துமா வாய்க்காலில் மின் மயானம் அமைத்து தரப்பட வேண்டும்” உள்ளிட்ட பிரச்சினைகளை அதில் பட்டியலிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் கடிதம்!