வைக்கம் போராட்டம் என்பது கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான முன்னோடியான போராட்டமாக அமைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாதி தீண்டாமைக்கு எதிராக நடத்தப்பட்ட வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை கேரளா அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஏப்ரல் 01) நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை கேரளா சென்றார்.
கொச்சி விமான நிலையத்தில் இறங்கிய அவரை, கேரள மாநில தொழில்துறை மந்திரி பி.ராஜீவி, கொச்சி மாவட்ட கலெக்டர் என்.எஸ்.கே. உமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் சேர்ந்து வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக வைக்கம் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் முதலில் மலையாளத்தில் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “உடல் வேறு என்றாலும், எனக்கும் பினராயி விஜயனுக்கும் சிந்தனை ஒன்று தான். தமிழ்நாடு சட்டமன்றத் தொடர் நடைபெற்று வரும் நிலையிலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கு வந்துள்ளேன்.
வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான முன்னோடியான போராட்டமாக அமைந்தது. அது இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.
மஹர் போராட்டத்தை நடத்துவதற்கு வைக்கம் போராட்டம் தான் தூண்டுகோலாக அமைந்தது என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுயமரியாதை, சமூகநீதி போராட்டத்தின் துவக்கமான வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன். “ என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் தந்தை பெரியார், தமிழர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல.
இந்தியாவுக்கு மட்டுமான தலைவர் அல்ல. உலகம் முழுமைக்குமான தலைவர்தான் தந்தை பெரியார்.
அவர் முன்மொழிந்த கொள்கைகள் அனைத்தும் அனைத்து நாட்டுக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவான சிந்தனைகள். எனக்கு எந்தப் பற்றும் இல்லை, மனிதப் பற்று மட்டுமே உண்டு என்று சொன்னவர் தந்தை பெரியார்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ராமேசுவரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல்: எ.வ.வேலு
ரூ.215.80 கோடியில் ஆற்றுப்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு