உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரைஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால், கொரோனா வழிகாட்டுதல்களை உலக நாடுகள் பின்பற்றுவதை தவிர்க்க கூடாது என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது .
சாதாரண மக்கள் முதல் பெரும் உலக தலைவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகாதவர்களே இல்லை எனும் அளவுக்கு தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான அறிகுறிகளுடன் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் , தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து அலுவல் பணிகளையும் ஜோ பைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டுள்ள ஜோ பைடன், இரண்டு முறை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியுள்ளார்.
ஜோ பைடன் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தான பாக்ஸ்லோவிட் மாத்திரையையும் எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைபேசி மற்றும் ஜூம் வழியாக கூட்டங்களில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜோ பைடனுக்கு நேற்று முன் தினம் (ஜூலை 19) கொரோனா சோதனை செய்தபோது தொற்று இல்லை என முடிவுகள் வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்