கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறைந்து கொண்டே செல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 17) தெரிவித்துள்ளார்.
2023 – 24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை மார்ச் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார். அவரைத்தொடர்ந்து மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அவர் பேசுகையில், “கடந்த முறை டெல்லிக்கு வந்த போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து சில கோரிக்கைகள் வைத்தேன். அதில் சிலவற்றில் முன்னேற்றம் உள்ளது.
இந்நிலையில் மாநில அரசுகள் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளில் மத்திய அரசிற்கும் பங்கு உள்ளது. அதுதொடர்பாக அவரிடம் சில கோரிக்கைகள் முன் வைத்துள்ளேன்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “வரும் திங்கட்கிழமை தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாகி இருந்தது. அதன்பின், கடந்த ஆண்டுகளில் படிப்படியாக நிலைமையை சமாளித்து நிதி பற்றாக்குறையை சமாளித்துள்ளோம். வரும் நடப்பாண்டிலும் அதை தொடர உள்ளோம்” என்றார்.
மேலும் அவர், “மத்திய அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை வைக்கவில்லை. சட்டப்படி எங்களுக்கு வர வேண்டியது வருகிறதா என்பதை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறைந்து கொண்டே வருகிறது.
உற்பத்தியில் மத்திய அரசிடம் வர வேண்டிய பங்கில் ஒரு சதவிகிதம் வரை குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதி குறைந்துள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்டாலின் உத்தரவு: திருச்சி சிவா வீட்டுக்கு சென்ற நேரு… நடந்தது என்ன?
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது?: தேதி அறிவிப்பு!