’உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள்’: நாராயணன் திருப்பதி
நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 20) நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டேன்னு ஆளுநர் பேசுறாரு. நீங்க யாரு இதை சொல்றதுக்கு? நீங்க ஒரு போஸ்ட்மேன் மாதிரி தான். ரொம்ப திமிரா பேசுறாரு ஆளுநர். அவர் ஆளுநர் ரவி அல்ல. ஆர்எஸ்எஸ் ரவி. ஆளுநருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டில் ஏதாவது தொகுதியில நின்னு உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்கள் செருப்பால அடிப்பாங்க” என ஆளுநரை விமர்சித்து உதயநிதி கடுமையாக பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது, “ஆளுநருக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு?.. ஆளுநருக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஏதோவொரு தொகுதியில் போட்டியிடுங்கள், உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்களை சந்தியுங்கள், உங்கள் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் சொல்லுங்கள். “செருப்பை கழட்டி அடிப்பாங்க” என்று தமிழக முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அநாகரீகமான அரசியலும் கூட. செருப்பால அடிப்பாங்க என்ற சொல் வன்மத்திற்குரியது, சட்டத்திற்கு புறம்பானது.
ஜெயிக்கவில்லையென்றால் மக்கள் ‘செருப்பால் அடிப்பார்கள்’ என்று அர்த்தம் என்றால், தி.மு.க எண்ணற்ற தேர்தல்களில் தோல்வியுற்றது என்பது உலகத்திற்கே தெரியும்.
1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2014, 2016 தேர்தல்களில் தோற்ற தி மு க வை தமிழக மக்கள் செருப்பால் அடித்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தந்தை கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிறார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்வியை இங்கே கேட்டு உங்கள் அளவிற்கு நான் தரம் தாழ்ந்து பேச மாட்டேன்.
மக்களின் இவ்வளவு செருப்படியையும் பெற்று கொண்டு தொடர்ந்து தி மு க தேர்தல்களில் போட்டியிடுவது கேவலமில்லையா? வெட்கக்கேடு இல்லையா? மானக்கேடு இல்லையா?
ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதலமைச்சரின் மகன் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை தரம் தாழ்ந்து தரம் கெட்டு ‘செருப்பால் அடிப்பாங்க’ என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
முதிர்ச்சியற்ற, அராஜகமான, அநாகரீகமான, மக்களை தூண்டி விடும் முறையில் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இப்படி தரக்குறைவாக பேசிய அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பதோடு, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்” என்று நாராயணன் திருப்பதி பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’அதிமுக மாநாடு தோல்வியை தழுவியுள்ளது’: பன்னீர் விமர்சனம்!
சந்திரயான் – 3: விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் வெளியீடு!