‘கட்டளையிடுங்கள்… 2024 தேர்தலிலும் வெற்றி உறுதி’ : உதயநிதி
திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (அக்டோபர் 9) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எ.வ.வேலு, பொங்கலூர் பழனிசாமி ஆகியோரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரையாற்றினார்.
பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு ஆகியோரை மாமா என்றும், துணை பொதுச்செயலாளர் கனிமொழியை அத்தை என்றும் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு பொதுக்குழு எப்படி நடத்த வேண்டும் என்று உலகிற்கே எடுத்துக்காட்டாக மு.க.ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கிறார்.
கலைஞர் இருந்திருந்தால் எப்படி கண்ணியம் கட்டுப்பாட்டோடு கட்சி தேர்தலை நடத்தியிருப்பாரோ, அதேபோன்று இந்த தேர்தலும் நடைபெற்றுள்ளது.
நீங்கள் (மு.க.ஸ்டாலின்) தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி இனியும் தொடரும்.
உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி இதுபோன்று உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என உங்களது உழைப்பைப் பார்க்கும் போது எங்களுக்குப் பொறாமையாக இருக்கும்.
கழகத்தில் 19 அணிகள் இருக்கின்றன. அந்த அணிகளின் செயலாளர்கள் சார்பில் எனக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கட்டளையிட்டபடி கடந்த 4 மாதங்களாக 200 தொகுதிகளில் திராவிட பயிற்சி பாசறையை நடத்தி முடித்திருக்கிறோம். அதுபோன்று இந்த 19 அணிகளுக்கும் நீங்கள் ஒவ்வொரு இலக்கு கொடுக்க வேண்டும்.
எங்களுக்குக் கட்டளையிடுங்கள், 2024 தேர்தலிலும் முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடத்தில் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.
பிரியா
திமுக தணிக்கை குழு உறுப்பினர்கள் நியமனம்!
திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்!