உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் கஸாலி என்பவர் நிறுத்தப்பட்டார். அமமுக சார்பில் ராஜேந்திரன் களமிறங்கினார். தவிர, இதே தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவியும் போட்டியிட்டார்.
ஆனால், இந்தத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுபோல் வாக்காளர் பிரேமலதா என்பவரும் உதயநிதியின் வெற்றி குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் எம்.எல்.ரவி, மீண்டும் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “கடந்த 2021இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
ஆனால் தேர்தல் வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது வேட்பு மனுவோடு இணைத்து வழங்கும் படிவம்-26 இல் தன் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அந்த தகவல் தவறானது. ஏனெனில் உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே அவர் வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது உதயநிதியின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என முறையிட்டு வலியுறுத்தினேன்.
ஆனால், எந்த பயனும் இல்லை. இந்த விதிமீறல் புகாரை புறந்தள்ளிவிட்டு உதயநிதியின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொண்டார். எனவே உதயநிதி வேட்புமனுவை ஏற்றது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தவறானது.
இதனால் அவர் தேர்தலில் பெற்ற வெற்றியும் முறைகேடானது. எனவே உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
சீதை போல தீக்குளிக்கத் தயார்: காயத்ரி ரகுராம்
மாற்றுத்திறனாளி துறைமீது தனிக்கவனம்: ஸ்டாலின்