உலகளவில் தகவல் தொழில்நுட்பம் மூலம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு என தகவல் தொழில்நுட்ப அணியை கொண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அணியின் மூலம் கட்சியின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.
இதன் அடுத்தக் கட்டமாக சமூக வலைதளம் மூலம் தொண்டர்களிடம் பேசும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் அண்மைக் காலமாக ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் மத்தியில் உரையாடுவது அதிகரித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் இன்று (அக்டோபர் 17 ) பேசி உள்ளார்.
தொண்டர்களுக்கு வணக்கம் சொல்லி தன்னுடைய உரையை தொடங்கிய அவர் “அதிமுக இன்று 50 ஆண்டுஆண்டுகளை கடந்து 51 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
சமூக வலைதள அரசியலை சமரசமில்லாமல் கழகத்திற்காக பரப்புரை செய்து வரும் கழக இணைய வீரர்களுக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை விளங்கச்செய்தவர் ஜெயலலிதா. அம்மா உணவகங்கள்,பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் ஜெயலலிதா.
எண்ணற்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தை இந்திய அரங்கில் உயரச் செய்தார் ஜெயலலிதா என்றார்.
சமூகவலைதளங்களில் அதிமுக தொண்டர்கள் எப்போதும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது சமூகவலைதளங்களில் இயங்குங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். கவனமாகவும் கண்ணியத்துடனும் செயல் படுங்கள் என்றார்.
தமிழகத்தில் கஞ்சா, ரவுடிசம் ,கள்ளச்சாராயம்,குட்கா, லாட்டரிச் சீட்டு, அதிகார துஷ்பிரயோகம் இருக்கிறது, அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது இத்தனையும் தமிழகத்தில் இருப்பதற்கு காரணம் திமுக ஆட்சியில் இருப்பது தான் என்று கூறிய அவர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!