‘பழைய பாசத்தோடு பேசிய ஆர்.பி.உதயகுமார்’ : தினகரன்

Published On:

| By Selvam

டிடிவி தினகரனை ஆர்.பி.உதயகுமார், ‘அண்ணன்’ என்று நேற்று கூறியிருந்த நிலையில், அவர் பழைய பாசத்தோடு பேசியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டவர்.

இவர் ஓபிஎஸ் அணிக்கு சென்றவுடன் ஆர்.பி.உதயகுமார் ஓ.பன்னீர் செல்வத்தை கண்டித்து நேற்று (ஆகஸ்ட் 28) அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில், “அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்கும் நோக்கத்தில் தான் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற நாடகத்தை ஓ.பன்னீர்செல்வம் அரங்கேற்றுகிறார்.

சசிகலாவை சிறையில் தள்ளி அனாதை ஆக்கியது ஓ.பன்னீர்செல்வம் தான். அதிமுகவை அழிக்காமல் ஓ.பன்னீர் செல்வம் ஓய மாட்டார். தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர்.

ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவிக்கு உயர்த்திய அண்ணன் டிடிவி தினகரனை அரசியலில் இருந்து அகற்றியவர்” என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்த்தார்.

அண்ணன் டிடிவி தினகரனை அரசியலில் இருந்து அகற்றியவர் ஓ.பன்னீர் செல்வம் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்த நிலையில்,

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த கால கசப்புணர்வா?அல்லது புரட்சித்தலைவரும் நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா? எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.

மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும். இதனை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை, அண்ணன் டிடிவி என்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தெரிவித்து கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

எடப்பாடிக்கு நிச்சயம் தண்டனை உண்டு: டிடிவி தினகரன்