“மக்களை வஞ்சிப்பதில் பழனிசாமியும், ஸ்டாலினும் ஒன்று” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும், முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவது குறித்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதியோர் உதவித் தொகையினைப் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கையினை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக அடுத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், அத்திட்டத்தின்கீழ் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதை நிறுத்தியும் வைத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட எத்தனையோ வாக்குறுதிகளைப்போல முதியோர் ஓய்வூதியத்தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் காற்றில் பறந்துபோய் விட்டது.
உறுதியளித்தபடி உதவித்தொகையை உயர்த்தவில்லையென்றாலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்ததை குறைப்பதும், புதியவர்களுக்கு வழங்க மறுப்பதும் பச்சைத் துரோகமாகும். முந்தைய பழனிசாமி அரசு ஆரம்பித்துவைத்த ஏழை, எளிய முதியோரை வஞ்சிக்கும் இந்தப் படுபாதகத்தை ஸ்டாலின் அரசும் தொடர்வது வேதனைக்குரியது. இதனால்தான், மக்களை வஞ்சிப்பதில் பழனிசாமியும், ஸ்டாலினும் ஒன்று எனச் சொல்கிறோம்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்