மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொண்டு வந்த Point Of Order -யை சபாநாயகர் ஜெகதீப் தன்கர் விதிகளை மீறி நிராகரித்துள்ளார் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் இங்கிலாந்தில் ஜனநாயகம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், மாநிலங்களவை தலைவருமான பியூஷ் கோயல் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு எதிராக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மார்ச் 13-ஆம் தேதி Point of Order கொண்டு வந்தார். இதனை சபாநாயகர் ஜெகதீப் தன்கர் ஏப்ரல் 5-ஆம் தேதி நிராகரித்தார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் நேற்று திருச்சி சிவா எம்.பி பேச முயன்றார்.
அப்போது அவரிடம் விதிமுறைப்படி உங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்று சபாநாயகர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த திருச்சி சிவா, “இங்கு நான் மாநிலங்களவை விதி 258-யை குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன். அதில், சபாநாயகர் அறிவுறுத்தலின்படி அவையில் எந்த ஒரு உறுப்பினரும் Point of Order சமர்ப்பிக்கலாம், சபாநாயகரின் முடிவு தான் இறுதியானது.
நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் பியூஷ் கோயல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஒருவர் வெளிநாட்டில் இந்திய ஜனநாயகத்தை தவறாக பேசியதாக கூறினார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பெயரை அவர் குறிப்பிடவில்லை. பின்னர் யாரை பியூஷ் கோயல் மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
நீங்கள் அனைத்து சட்ட விதிகளையும் அறிந்தவர். பியூஷ் கோயலுக்கு எதிராக மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய point of order-யை நீங்கள் ரத்து செய்தது நாடாளுமன்ற விதிகள் 238, 238 (1) (2) (5) ஆகியவற்றை மீறுவதாக உள்ளது” என்று பேசினார்.
ஜெகதீப் தன்கர், “திருச்சி சிவாவின் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன், மல்லிகார்ஜூன கார்கே விவகாரத்தில் மாநிலங்களவையின் விதிகளுக்கு உட்பட்டு தான் நான் முடிவுகளை எடுத்துள்ளேன்” என்றார்.
அவரது பதிலை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபாநாயகருக்கு எதிராக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: ராஜஸ்தானி ஆலூ
உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம்: தேர்வாளர்கள் பட்டியல் ரத்து!