முதல்வரின் பயணம்!
கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 10) காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார்.
மாணவர்களின் கல்விச் சுற்றுலா!
தமிழ்நாடு முழுவதுமிருந்து அரசு பள்ளியைச் சேர்ந்த 67 மாணவர் மாணவிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்விச் சுற்றுலாவுக்காக இன்று திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் அழைத்துச் செல்கிறார்.
5 நாட்களுக்குக் கனமழை!
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்குப் பரவலாகக் கனமழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராகுலுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!
மகாராஷ்டிராவில் மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
சினிமா அப்டேட்!
தனுஷ் நடிப்பில் உருவாகும் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல், விஜய் சேதுபதியின் 46ஆவது படத்தின் தலைப்பு, உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத்தலைவன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆகியவை இன்று நடைபெறுகிறது.
சொந்த மாநிலம் செல்லும் குடியரசுத் தலைவர்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக நவம்பர் 10,11 தேதிகளில் ஒடிசாவுக்குச் செல்கிறார். குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அவர் செல்கிறார்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 173-வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
குஜராத் தேர்தல் வேட்புமனு!
குஜராத்தில் முதற்கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடந்து வரும் நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 17ஆம் தேதி நிறைவடைகிறது.
வேளாண்மைப் பல்கலை கலந்தாய்வு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
பிரதமர் வருகை- ட்ரோன்கள் பறக்க தடை!
காந்தி கிராம பல்கலையில் 11ம் தேதி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கப் பிரதமர், முதல்வர் வருகை தரவுள்ளதால் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய பகுதிகளில் 10, 11ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.