டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

Published On:

| By christopher

“இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அரசு பதவிகளில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அவற்றில் முக்கியமானது   டிஎன்பிஎஸ்சி குரூப்-4.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டகக் காப்பாளர் போன்ற பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (மே 13) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு 12,000 காலிப்பணியிடங்களும், 2019ஆம் ஆண்டு 10,000 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

கொரோனா தொற்று காலத்தில் தனியார் துறையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள், புதிதாக கல்லூரி முடித்தவர்கள் அதிகளவில் போட்டித் தேர்வில் கவனம் செலுத்தினர்.

இதனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் தேர்வில், இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிக்கை வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு இலவு காத்த கிளி போல மாறிவிட்டது. 

குறைந்த அளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதால் மூன்று ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்கு தயராகி கொண்டிருந்த மாணவ, மாணவிகளின் மத்தியில் பெருத்த ஏமாற்றமும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் அரசுப்பணி கனவாகிப் போய்விடுவோமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறியிருந்தது.

ஆனால் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். 

இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க வேண்டும்.

அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

கிச்சன் கீர்த்தனா: உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாமா?

டிஜிட்டல் திண்ணை: கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா… எதிர்க்கட்சிகளின் பொது மேடை ஆக்குவாரா ராகுல்?

TNPSC Group-4 posts should be increased