வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்குவதில் தமிழகத்திற்கு மட்டும் ஏன் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்று திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா இன்று (டிசம்பர் 20) கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை போல நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி சார்ந்ததாக மாறிவிட்டது. சான்சட் தொலைக்காட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது ஒளிபரப்புவதில்லை. அவையில் நாங்கள் பேசும்போது ஒலிபெருக்கி தருவதில்லை.
பேரிடர் மீட்பு பணிகளை தமிழக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்க நான் முற்பட்டபோது அவை தலைவர் எனக்கு வாய்ப்பு தரவில்லை.
தமிழக அரசு மீது வைத்த குற்றச்சாட்டிற்கு பியூஷ் கோயல் முறையான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இன்று நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் என்னுடைய கோரிக்கையை அவை தலைவர் ஏற்கவில்லை.
மோசமான மழை பாதிப்பினால் சென்னை பாதிக்கப்பட்டுள்ள போது மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.492 கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளார்கள். அதே நேரத்தில் குஜராத்தில் ஏதேனும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் ரூ.1000 கோடி நிதி ஒதுக்குகிறார்கள். தமிழகத்திற்கு மட்டும் மத்திய அரசு ஏன் இந்த ஓரவஞ்சனை காட்டுகிறது.
நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஏன் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவில்லை? நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது அவை நடவடிக்கைகள் குறித்து வெளியில் பேசுவது மரபு அல்ல” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: 3 நாட்களுக்கு பின்னர் மீட்பு!
அதிகரிக்கும் கொரோனா: கலக்கத்தில் தெலங்கானா