பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்கா அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் தேவையான நிலத்தை வழங்கி இன்று (மார்ச் 22) ஒப்பந்தம் கையெழுத்தாக ஏற்பாடு செய்துவிட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகரில் உள்ள இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைய உள்ளது. இதற்கான துவக்கவிழா சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளிப்பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத்தொடர்ந்து பிஎம் மித்ரா ஜவுளி பூங்காவை சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் காணொலி வாயிலாக இருவரும் தொடங்கி வைத்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் கோடியில் அமையவுள்ள இந்த ஜவுளிப்பூங்காவினால் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கே நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்து
பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”விருதுநகரில் ஜவுளி மண்டலம், ஆடைப் பூங்கா அமைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் நெசவு தொழில். ஆடை தயாரிப்பில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பெருமளவில் பருத்தி நூல் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
மார்ச் 17 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்கா அறிவிக்கப்பட்டது. நான்கே நாட்களில் தேவையான நிலத்தை வழங்கி இன்று ஒன்றிய அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாக ஏற்பாடு செய்துவிட்டோம். இதுவே தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் வேகம்.
தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு செயலாற்றி வருகிறது. விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில் பி.எம்.மித்ரா பூங்கா அறிவித்த பிரமருக்கு நன்றி. அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமரை நிச்சயம் அழைப்போம். தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருக்க வேண்டும் என செயலாற்றிவருகிறோம். ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா சிப்காட் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
தொழில் துறையில் உலகளவில் தமிழகம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியாவில் அல்ல, தெற்கு ஆசியாவிலேயே தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக உருவாக்கிட அனைவரும் பாடுபட வேண்டும். ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவால் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு
முன்னதாக விழாவில் கலந்துகொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. தமிழகத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற இருக்கிற முதலமைச்சருக்கும், தமிழகத்திற்கு இந்த திட்டத்தை கொடுத்திருக்கிற பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. இந்த பூங்கா சாதாரண விஷயமல்ல.
விருதுநகரில் 1,502 ஏக்கரில் இந்த பூங்கா தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் நேரடியாக 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும், மறைமுகமாக 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாகும்.” என்று அவர் பேசினார்.
பிஎம் மித்ரா ஜவுளிப் பூங்காவின் உறைவிடம்
பிரதமர் மோடி இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள்! முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர், பிரதமரின் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காவின் உறைவிடமாக இருக்கும். இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும் பயனளிக்கும்.
தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. பிரதமரின் மெகா ஜவுளிப் பூங்கா, உலக அளவிலான செயற்கை இழை மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற உதவும். இதன் மூலம் ஜவுளிக்கான சர்வதேச மையமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக தேர்தல்: காரசார வாதம்… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!
செல்ஃபி எடுக்கும் தலைவர்கள்: AI கலைஞரின் மாயாஜாலம்!