அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம்: அழைப்பு விடுத்த திருமா

Published On:

| By Selvam

அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, நாளை (டிசம்பர் 28) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என அம்பேத்கர் பெயரைச் சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது’ என்று அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசினார். இதனால் நாடு எங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஒருவார காலத்துக்கும் மேலாக விசிக அனைத்து மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான தலித் அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து 28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானித்து அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல இடதுசாரிக் கட்சிகள் டிசம்பர் 30-ம் தேதி இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென முடிவு செய்துள்ளன.

இத்தனை போராட்டங்கள் எதிர்ப்புகளுக்குப் பின்னரும் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அதனை நியாயப்படுத்தி வருகிறார்.

அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆளும் பாஜக உறுப்பினர்களும்கூட அம்பேத்கரின் பெயரை எண்ணற்ற முறை உச்சரித்தனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது ‘தேசத் தந்தை’ காந்தியடிகள் குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியாதோ, அப்படித்தான் அரசமைப்புச் சட்டம் குறித்துப் பேசும்போது ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை’ அம்பேத்கரின் பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது.

அம்பேத்கர் ஒரு சமூகத்தின் தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அரசமைப்புச் சட்டம் என்னும் அடித்தளத்தை அமைத்துத் தந்த தலைவர். அவரை இழிவுபடுத்துவது அரசமைப்புச் சட்டத்தை இழிவு படுத்துவதற்குச் சமம்.

அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, நாளை (டிசம்பர் 28 சனிக்கிழமை) அன்று மாலை 4 மணி அளவில் சென்னை- வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

ராஜ்

ஹெல்த் டிப்ஸ்: செக்ஸ் உறவை பாதிக்குமா… ஆண்களுக்கான கருத்தடை?

பியூட்டி டிப்ஸ்: பற்களைப் பளிச்சிட வைப்பது… டூத் பேஸ்ட்டா, பல் பொடியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share