நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 7) தெரிவித்துள்ளார்.
மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்விற்கான முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
ஆனால், அந்த 67 மாணவர்களில் 6 மாணவர்களின் பதிவெண்கள் அடுத்தடுத்து இருந்ததால் தேர்வில் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக சக மாணவர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில், மே 5ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மீண்டும் தேர்வை நடத்தக்கோரியும் இன்று (ஜூன் 7) மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 7) தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:
- நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.
- அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.
- சமூகநீதிக்கு எதிரானவை.
- தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.
நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழருக்கு விஜய் வாழ்த்து!
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு : ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவு!
Comments are closed.