சென்னை டிபிஐ வளாகத்தில் நிறுவுவதற்காக தயாராகி வரும் பேராசிரியர் அன்பழகன் முழுஉருவ சிலையின் மாதிரியை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கண்ணாடியின் நிறத்தை மாற்ற அறிவுறுத்தினார்.
திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் அன்பழகனின் பிறந்த நாள் விழாவை நூற்றாண்டு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
அவர் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களை நினைவு கூறும் வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறையின் தலைமையகமான டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் வளாகம் என பெயர் சூட்டி, பேராசிரியர் அன்பழகன் நினைவு வளைவினை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை நிறுவப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகனின் முழு உருவ சிலையானது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் அமைந்துள்ள சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடத்தில் தயாராகி வருகிறது.
8.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக களிமண் மாதிரி சிலை தற்போது வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சிற்பி தீனதயாளன், சிற்பி கார்த்திகேயன் குழுவினர் இந்த சிலையினை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.
இந்த மாதிரி சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், ஆலோசனைகளை சிற்பிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
பேராசிரியர் அன்பழகன் சிலையில் மூக்கு கண்ணாடி கருப்பு நிறத்தில் இருந்த நிலையில் அதன் நிறத்தை பிரவுன் நிறத்தில் மாற்றுமாறு சிற்பிக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் சிலை தயாரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் காலம் குறித்தும் முதலமைச்சர் சிற்பியிடம் கேட்டறிந்தார். கண்ணாடி நிறத்தை மாற்றி முதலமைச்சர் ஒப்பதல் பெற்ற அதிலிருந்து வெண்கல சிலை வார்ப்பு பணிகள் நடைபெறும் எனவும் இந்த சிலை தயாரிப்பு பணிகள் முடிவடைய 2மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
“துரோகியை வீழ்த்திடுவோம்”- எம்ஜிஆர் நினைவுநாளில் ஓபிஎஸ் உறுதிமொழி!
ஓட்டுநர் டூ கோடீஸ்வரர்: துபாயில் இந்தியருக்கு அடித்த லாட்டரி!