பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்புக் கோரிய நிலையில், அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 5) உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் காரணம் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசி பெரும் சர்ச்சை ஏற்படுத்தினார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷோபா மீது நான்கு பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஷோபா மன்னிப்பு கோரினால் அதனை ஏற்க தயார்” என்று தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஷோபா தரப்பில் மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை. எனது கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஷோபா தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ஷோபா மன்னிப்பு கூறியதை தமிழக மக்கள் சார்பாக ஏற்றுக்கொள்கிறோம்” என தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஷோபா கர்ந்தலஜே மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”தமிழக கல்வி முறையை குறை சொல்வதை ஏற்க முடியாது” : ஆளுநருக்கு உதயநிதி பதில்!
உண்மையை உடைத்த மலையாள நடிகை … தமிழ் டைரக்டருக்கு சிக்கல்!
கொல்வதற்கு முன், ரசிகரின் பிரைவேட் பார்ட்சை கருக்கிய நடிகர் தர்ஷன்