வரும் 15 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இரவு பாடசாலை திட்டத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு ஒன்றை இன்று (ஜூலை 13) வெளியிட்டுள்ளது.
தன்னுடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை வைத்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய்.
சட்ட மாமேதை புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது விஜய் மக்கள் இயக்கத்தினரும் அம்பேத்கரின் சிலைக்கு பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விமரிசையாக கொண்டாடினார்கள்.
இதனிடையே, கடந்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுபொருட்களை வழங்கினார். அதோடு அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார் நடிகர் விஜய். மேலும், காமராஜர் பிறந்த நாளையும் விமரிசையாக கொண்டாட உள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
இச்சூழலில், விஜயின் இந்த நடவடிக்கை அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிக்கை செய்தி ஒன்றை இன்று (ஜூலை 13) வெளியிட்டுள்ளார்.
அதில், “தளபதி” அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்” ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்