தென்காசி தொகுதியில் நடைபெற்று வரும் தபால் ஓட்டு மறு வாக்கு எண்ணிக்கையில் Form 13 A பிரிவில் உள்ள அனைத்து தபால் வாக்குகளும் சரிபார்க்கப்பட்டு எண்ணி முடிக்கப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில் தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி 10 நாட்களில் முடிவை அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தென்காசி தொகுதி தபால் ஓட்டு மறு எண்ணிக்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரத்தில் படிவம் 13 பி ஐ காட்டும்படி அதிமுக வேட்பாளர் கூறியதால் வாக்கு எண்ணும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கிய நிலையில் வாக்குப்பதிவு சீட்டில் கெஜட் அதிகாரிகளின் கையெழுத்து இல்லாத படிவங்களை நிராகரிக்க கோரி அதிமுக வைத்த கோரிக்கையால் மதியம் 3 மணியளவில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் துவங்கப்பட்டு Form 13 A பிரிவில் உள்ள அனைத்து தபால் வாக்குகளும் சரிபார்க்கப்பட்டு எண்ணி முடிக்கப்பட்டது. இதில் 9 வாக்குகள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 13 B பிரிவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் பின்னரே Form 13 C போலட் வாக்கு சீட்டுகள் எண்ணப்பட இருக்கிறது.
செல்வம்