தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் இன்று (பிப்ரவரி 19) நடைபெற்றது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர்.
அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி. அனைவருக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரில் ‘க்’ சேர்க்க பல தரப்பிலிருந்தும் இருந்து கோரிக்கை வந்ததையடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகளிர் உரிமைத் தொகை : இந்த ஆண்டுக்கான நிதி எவ்வளவு?
TN Budget 2024 : பள்ளி கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு!
Comments are closed.