ஜி20 கருத்தரங்குகளுக்கு தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று(டிசம்பர் 5) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “2023ஆம் ஆண்டுக்கான ஜி20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில், பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்று இந்த ஜி20 மாநாடு. உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கிய பங்குஆற்ற வேண்டியுள்ளது.
ஜி20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமூகநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தியா ஜி20 தலைமையை ஏற்றதை தொடர்ந்து நடத்தப்பட உள்ள கருத்தரங்குகளுக்கு தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும்.
காலநிலை மாற்றத்தை தடுப்பதற்காக இந்தியஅரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடுஅரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இயற்கை பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும் காலநிலை மாற்றத்தை கையாளவும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம்.
உலகஅளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களை காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
டிசம்பர் 8ல் அதி கனமழை: வானிலை அலர்ட்!
28,000 சத்துணவு மையங்களை மூட திட்டமா? அமைச்சர் விளக்கம்!